தேசிய செய்திகள்

மராட்டிய முதல்-மந்திரி ரதயாத்திரை செல்ல திட்டம்

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநிலம் முழுவதும் ரதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார்.

மும்பை,

288 இடங்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைப்பதற்கு ஆளும் பாரதீய ஜனதா கட்சி இப்போதே வரிந்து கட்டத்தயாராகி விட்டது.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநிலம் முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டு பொதுமக்களை சந்திப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த ரத யாத்திரைக்காக ரதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள வாகனத்தை மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மும்பையில் நேற்று அறிமுகம் செய்தார்.

இதற்காக 2 வாகனங்களை பாரதீய ஜனதா கட்சி வழங்கி உள்ளது. ஒன்று, கட்சியின் தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச மாநிலத்தில் பயன்படுத்தியதாகும். மற்றொன்று, மத்திய பிரதேச மாநிலத்தில், அதன் முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் பயன்படுத்தியதாகும். ஏற்கனவே நாங்கள் வெற்றிகரமாக பயன்படுத்திய வாகனங்களை மராட்டிய சட்டசபை தேர்தலிலும் பயன்படுத்துவோம் என்று சந்திரகாந்த் பாட்டீல் கூறினார்.

ஆகஸ்டு 1-ந் தேதி (நாளை) தனது ரத யாத்திரையை அமராவதியில் உள்ள மொசாரியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொடங்குகிறார். ஆகஸ்டு 31-ந் தேதி நிறைவு செய்கிறார்.

SCROLL FOR NEXT