டேராடூன்,
உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோவில்கள் பிரசித்தி பெற்றவை. அதில் புகழ்பெற்ற கேதார்நாத் கோவில், குளிர்காலத்தை ஒட்டி அடுத்த மாதம் 6-ந் தேதி மூடப்படுகிறது.
இந்நிலையில் அதற்கு ஒருநாள் முன்னதாக 5-ந் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி அங்கு செல்ல உள்ளார். அப்போது அவர், ரூ.400 கோடி மதிப்பீட்டிலான கேதார்புரி மறுகட்டுமான திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார்.
கேதார்நாத்துக்கு பிரதமரின் வருகையை உறுதிப்படுத்திய உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி, கோவிலில் வழிபடும் மோடி, கேதார்புரி மறுகட்டுமானப் பணிகளை தொடங்கிவைப்பதுடன், ஆதி சங்கராச்சாரியாரின் சிலை ஒன்றையும் திறந்துவைப்பார் என்று கூறினார்.