தேசிய செய்திகள்

முஸ்லிம் வாலிபர் கொண்டுவந்ததால் உணவை வாங்க மறுப்பு-ஸ்விக்கி நிறுவனம் போலீசில் புகார்

முஸ்லிம் வாலிபர் கொண்டுவந்ததால் உணவை வாங்க மறுத்தவர் மீது ஸ்விக்கி நிறுவனம் போலீசில் புகார் அளித்துள்ளது.

ஐதராபாத்,

ஐதராபத்தில் ஒருவர் ஸ்விக்கி செல்போன் ஆப் மூலம் சிக்கன்-65 ஆர்டர் கொடுத்தார். அதில் ஒரு இந்து மூலம் உணவை வழங்கும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் ஸ்விக்கி நிறுவனத்தில் இருந்து முஸ்லிம் வாலிபர் அந்த உணவை கொண்டு சென்றதால் அவர் அதனை வாங்க மறுத்துவிட்டார்.

இதுபற்றி ஸ்விக்கி நிறுவன பிரதிநிதி முடாசிர் சுலேமான் என்பவர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

தானியங்கி முறையிலேயே ஆர்டர்கள் ஒதுக்கப்படுகிறது. எங்கள் ஊழியருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே நாங்கள் பாகுபாடு பார்ப்பதில்லை என்று ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது. வாடிக்கையாளர், ஒரு முஸ்லிம் ஓட்டலில் இருந்துதான் அந்த உணவை வரவழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT