கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கடன் தொல்லையால் வளர்க்க முடியவில்லை... 3 குழந்தைகளை ஏரியில் தள்ளி கொலை செய்த தந்தை - அதிர்ச்சி சம்பவம்

கடன் தொல்லை காரணமாக ஆட்டோ டிரைவர், பிள்ளைகளை வளர்க்க முடியாததால் ஏரியில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி நகரத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில். ஆட்டோ ஓட்டி வருகிறார். அவரது மனைவி சபீனா கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஷீபாத் (8 வயது), ஹாயத் (7 வயது), மரியம் (5 வயது) என்ற மூன்று மகள்கள் இருந்தனர்.

சபீனா நேற்று முன்தினம் பணிக்கு சென்று திரும்பி வந்தபோது வீட்டில் பிள்ளைகளை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். கணவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆட்டோ சவாரியில் இருக்கிறேன் என்று சரியாக பதிலளிக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து சபீனா குந்தைகளை ஊரெல்லாம் தேடினார். பின்னர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் இஸ்மாயிலை பிடித்து விசாரித்தனர். அவர், “குழந்தைகளுக்கு தோசை வாங்கி கொடுப்பதற்காக ஓட்டலுக்கு அழைத்துச் சென்றேன். அதன் பிறகு எனக்கு ஆட்டோ சவாரி வந்ததால் நான் அவர்களை வீட்டிற்கு செல்லும்படி கூறிவிட்டு சென்றுவிட்டேன்" என்று கூறியுள்ளார்.

ஆனால் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அவர் சொன்ன ஓட்டல் பகுதியில் இவர்கள் சென்ற காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை. அதன் பிறகு இஸ்மாயிலிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, பிள்ளைகளை ஏரியில் தள்ளிவிட்டு கொன்றதாக இஸ்மாயில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.

தனக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருந்ததால் பிள்ளைகளை காப்பாற்ற முடியவில்லை, அதனால் அவர்களை ஏரியில் தள்ளிவிட்டேன். நானும் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்... ஆனால் முடியவில்லை என்றார். இதையடுத்து இஸ்மாயிலை கைது செய்த போலீசார், குழந்தைகளின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மகள்களின் உடல்களை மீட்ட போலீசார், மூத்த மகளின் உடலை தொடர்ந்து தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also read:தாண்டாக்கவுண்டனூர் மாரியம்மன் கோவில் பூச்சாற்று விழா: யாரையும் ஒதுக்கி வைத்து நடத்தக் கூடாது - ராமதாஸ்