புதுடெல்லி,
சீனாவை சேர்ந்த பிரபல செல்போன் நிறுவனம் 'விவோ'. இந்நிறுவனம் இந்தியாவில் கிளைகளை அமைத்து தொழில் செய்து வருகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும் விவோ நிறுவனத்தின் இயக்குனர்களாக ஹுஹென்ஷென் ஒவ் மற்றும் ஹூஹெங் ஜீ ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
இதற்கிடையில், விவோ நிறுவனம் மற்றும் அதற்கு தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இந்த சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் செயல்பட்டு வரும் விவோ நிறுவனத்தின் இயக்குனர்களான ஹூஹென்ஷென் ஒவ் மற்றும் ஹூஹெங் ஜீ ஆகிய 2 பேரும் இந்தியாவை விட்டு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 பேரும் சீனாவுக்கு சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்திய நிலையில் விவோ நிறுவனத்தின் இயக்குனர்கள் 2 பேர் இந்தியாவை விட்டு தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.