புதுடெல்லி
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.
வழக்கமாக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள். ஆனால், தற்போது கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு புதிய முடிவை எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மக்காவுக்கு ஹஜ் பயணத்தில் பங்கேற்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை சவுதி அரேபியா கணிசமாக குறைக்க திட்டமிட்டு உள்ளதாக அரசு நடத்தும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெளி நாடுகளில் இருந்து யாரும் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதே நேரம் சவுதி அரேபியாவுக்குள் உள்ள வெளிநாட்டினர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறி உள்ளது
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறி உள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது;
இந்தியாவில் இருந்து ஹஜ் புனித பயணத்திற்கு சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட மாட்டார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்திற்கு அனுமதி இல்லை. ஹஜ் புனித பயணத்திற்கு விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும். 2.3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்து கட்டணம் பிடிக்கப்படாமல் பணம் திரும்ப வழங்கப்படும் என கூறி உள்ளார்.