தேசிய செய்திகள்

திருடியதாக குற்றம் சாட்டி விதவைப்பெண் அடித்துக்கொலை

திருடியதாக குற்றம் சாட்டி விதவைப்பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

டெல்லியில் மெராலி பகுதியை சேர்ந்தவர் மஞ்சு கோயல் (வயது 44). இவர் விதவைப்பெண். டெல்லியில், சதீஷ் பாவா என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். ஓரிரு நாட்களுக்கு முன்பு, மஞ்சு கோயலின் சகோதரர் மகேஷ் ஜிண்டாலுக்கு சதீஷ் பாவாவிடம் இருந்து போன் அழைப்பு வந்தது.

மஞ்சு கோயல், தங்கள் வீட்டில் திருடி விட்டதாக பாவா குற்றம் சாட்டினார். அதைக்கேட்டு மகேஷ் ஜிண்டால் அங்கு சென்றபோது, அவருடைய சகோதரியை சதீஷ் பாவாவும், அவருடைய மகன் பங்கஜும் அடித்து உதைத்துக் கொண்டிருந்தனர்.

தனக்கு நெஞ்சு வலிப்பதாக மஞ்சு கோயல் கூறியதையடுத்து, அவரை மகேஷ் ஜிண்டால் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவரது நிலைமை மோசமடையவே, டாக்டரை வரவழைத்தனர். ஆனால், கோயல் உயிர் பிரிந்து விட்டது. இதுதொடர்பான புகாரின்பேரில், வீட்டு உரிமையாளர் சதீஷ் பாவா, அவருடைய மகன் பங்கஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.