அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 52) ஓவியர். இவருடைய மனைவி முத்துலட்சுமி (47). இவர்களுடைய மகன்கள் ஸ்ரீகாந்த் (16) மற்றும் வாசுதேவன் (14).
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வாசுதேவன் தனது வீட்டில் இருந்து மொபட்டில் வெளியே சென்றான். மொபட் சிறிது தூரம் சென்றதும், அந்த பகுதியை சேர்ந்த கார் டிரைவரான சாமிநாதன் (44) என்பவரின் நாய் மீது மோதியது. இதனால் சாமிநாதன் ஆத்திரம் அடைந்து வாசுதேவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாசுதேவன் ஓட்டிச்சென்ற மொபட்டை சாமிநாதன் பிடுங்கி வைத்துக்கொண்டு, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து வாசுதேவன் தனது தந்தையிடம் சென்று தெரிவித்துள்ளான். உடனே சாமிநாதன் வீட்டிற்கு ராஜேந்திரன் சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சாமிநாதன் தாக்கியதில் ராஜேந்திரன் கீழே விழுந்தார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜேந்திரனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவினாசி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சாமிநாதனை கைது செய்தனர்.