புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டர். அதன் பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதிகள் மற்றும் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:-
'பேரிடர் காலத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக சுகாதாரத் துறையில் தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து மருத்துவத் துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டுள்ளேன்.
மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தொடங்கப்பட்டு மூன்று நாட்களிலேயே 25,617 பேர் இதனால் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. கொரோனா 3-வது அலை வந்தாலும் அதனை தடுக்க அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளும் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் திகழ்கிறது, இம்மாவட்டத்தில் 98 சதவீத மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,
இந்தியாவிலேயே அதிக கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதில் அதிக கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக புதுக்கோட்டையே திகழ்கிறது, இம்மாவட்டத்தில் 60% கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று கூறினார்.