மதுரை மண்டேல நகர் ரிங்ரோடு சாலையில் கடந்த புதன் கிழமை நள்ளிரவில் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. அதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அதில் சம்பவ இடத்திலேயே பெருங்குடி சோளங்குருணியை சேர்ந்த ரஞ்சித்குமார்(வயது 16), வீரசந்தானம் (18) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இதில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நல்லூரை சேர்ந்த சாரதி (17) என்பவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் சாரதி நேற்று இறந்தார். இதன் மூலம் இந்த விபத்தில் 3 பேரும் இறந்து விட்டனர். சம்பவம் குறித்து டவுன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.