தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 14-ந்தேதி அன்று ரோந்து சென்ற போது இந்திய கடல் எல்லையான மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் படகில் இருந்த இலங்கை நிகாம்பு பகுதியை சேர்ந்த மார்க்ஸ் ஜூட் (வயது 62), இமானுவேல் நிக்சன் (51), சுதீஷ்சியான் (21), ஆன்டனி ஹேமாநிசந்தன் (48), துருவந்தா ஸ்ரீலால் (28) ஆகிய 5 பேரை மீட்டு தருவைக்குளம் கடலோர போலீசில் ஒப்படைத்தனர்.
அதை தொடர்ந்து போலீசார் இந்த 5 மீனவர்களை நேற்று ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கவிதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி 5 மீனவர்களையும் வருகிற 31-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் சென்னை புழல்சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.