சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளை மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்க சென்னை மாநகராட்சியும், பெருநகர வளர்ச்சிக் குழுமமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இவ்வளவுக்கு பிறகும் சந்தையில்தான் காய்கறிகளை வாங்குவோம் என்று மொத்தமாக பொதுமக்கள் குவிந்தால், அவர்களை கொரோனா வைரசிடமிருந்து எவராலும் காப்பாற்ற முடியாது. ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுவதால் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் ஆபத்தும், மற்றவர்களுக்கு நோயை தொற்றவைக்கும் ஆபத்தும் உள்ளது. இவற்றைக் கடந்து ஊரடங்கை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டால் நீங்கள் உங்களின் எதிர்காலத்தையே இழக்க நேரிடும். எனவே, தமிழக மக்கள் அனைவரும் சொந்த நலன் கருதியும், பொது நலன் கருதியும் ஊரடங்கு காலத்தில் வீடுகளை விட்டு வெளியே வருவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
அதேபோல், காவல்துறையினரும் கோயம்பேடு சந்தை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் அதிக எண்ணிக்கையில் தடுப்புகளை அமைத்து மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும். தேவையின்றி ஊரடங்கை மீறுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.