சென்னை
சென்னையைச் சேர்ந்த பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சொத்துக்காக நடந்த இந்த கொலை வழக்கின் விசாரணை சென்னை முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் ஆகஸ்டு 2-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம் ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர்கள் இருவரும் ஆஜராக இயலவில்லை என்று தெரிவித்தார்.
பொதுவாக குற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஆஜராகும் பட்சத்தில்தான் தீர்ப்பு வழங்கப்படும்.
இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் குற்றம்சாட்டப்பட்ட பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம் ஆகியோர் ஆஜராகாத காரணத்தால் தீர்ப்பை இன்று தள்ளிவைப்பதாக நீதிபதி அல்லி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கபட்டது டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது. தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.