காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலில் பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில், அந்த வார்டில் அனைத்து வீடுகளிலும், நகராட்சி சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்தனர்.
காஞ்சீபுரம் நகராட்சி பகுதியில், கற்பக விநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் விஜயகுமார் மகள் ஸ்ருதி (வயது 12). பள்ளி மாணவியான இவருக்கு, கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. டெங்கு பாதிப்பு என்பது தெரிந்த பின், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தொடர்ந்து நகராட்சி, அவர் வசித்த 11வது வார்டின் அனைத்து வீடுகளுக்கும், நகராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆய்வு செய்தனர்.செவிலியர்கள், காய்ச்சல் இருக்கிறதா? என அனைவரிடமும் விசாரித்தனர்.
இதேபோன்று, மாணவி படித்த தனியார் பள்ளியிலும் சுகாதார பணியாளர்கள் விசாரித்தனர். பின், அனைத்து பகுதிகளிலும் கொசு ஒழிப்பான் புகை மருந்து அடிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதுர், குன்றத்துர், மதுரமங்கலம், வல்லம், சிங்கராயபுரம் ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பகுதிகளிலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.