சென்னை,
தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் மத்திய கப்பல்துறை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினேன். தமிழகத்தில் தற்போது நடந்து வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். மேலும் ஒகி புயலினால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு எந்தவித பாரபட்சமன்றி இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
இதற்கு முதல்அமைச்சர் என்னிடம், அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொள்வதாக தெரிவித்தார். கன்னியாகுமரியில் துறைமுகம் அமைப்பதற்கு தமிழக அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அவரிடம் எடுத்துரைத்தேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துவரும் மேம்பாலப்பணிகள் மற்றும் தமிழகத்தில் நடைப்பெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகள் விரைந்து முடிக்க அவரிடம் வலியுறுத்தினேன். நான் சொன்ன அனைத்து விஷயங்களையும் கேட்டறிந்த முதல்அமைச்சர், உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.