மதுரை,
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டின் போது ஒரு அரசு காப்பீடு நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். இருப்பினும் நாட்டில் உள்ள நான்கு அரசு காப்பீடு நிறுவனங்களில் எந்த நிறுவனம் என்பதை அவர் அப்போது அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழகத்தை தலைமையிடமாக கொண்ட யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆதாயத்தை மட்டுமே பார்க்கும் தனியாரிடம் அரசு காப்பீட்டு நிறுவனத்தை கொடுக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், தனியாருக்கு விற்கப்போவது எந்த காப்பீட்டு நிறுவனம் என பெயர் கூறாமல் இருப்பது எந்த மாதிரியான ஜனநாயகம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நாட்டில் உள்ள 4 காப்பீடு நிறுவனங்களையும் பாதுகாக்க வேண்டும் எனவும், நிதி தேவைகளை ஈடு செய்ய வேறு வழிகள் உள்ளதாகவும் சு.வெங்கடேசன் எம்.பி. தனது கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.