அரசு போக்குவரத்து கழகங்களில் புதிய தொழிலாளர்களை நியமனம் செய்ய வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் முறையை புகுத்தக்கூடாது. ஒப்பந்தத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். போதுமான உதிரி பாகங்களை வழங்க வேண்டும். சட்டத்தை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) வாயிற்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முருகன், துணை பொதுச்செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் அருண்பாலன் வரவேற்றார்.
கூட்டத்தில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன், சிறப்பு தலைவர் பாஸ்கரன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பழனிவேல், விழுப்புரம் மண்டல துணை செயலாளர் ரகோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் துணை தலைவர்கள் முத்துக்குமரன், ஜான்விக்டர், விழுப்புரம் பொருளாளர் சுந்தரபாண்டியன் உள்பட ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை பொதுச்செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.