சென்னை,
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி உள்ள தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் அறிமுகமாகிறது. அதேபோல், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி கோவேக்சின்.
இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. தடுப்பூசிகளுக்கு இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதால், விரைவில் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்கும் எனத்தெரிகிறது. தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளநிலையில், முன்களப் பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலாவதாக முன்கள பணியாளர்களுக்கும் பின்னர் பொதுமக்களுக்கும் தடுப்பு செலுத்தப்படும். முதற்கட்டமாக 6 லட்சம் முன்களப் பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. கோவிஷீல்டு, கோவாக்சின் மருந்துகளுக்கு அனுமதி தந்தது மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக 2.5 கோடி மருந்துகளை சேமித்து வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கொரோனா இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.