ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கோர்ட்டில் அனுமதி பெற்று கடந்த 17-ந் தேதி சயானிடம் போலீசார் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதில் முக்கிய நபர்களுக்கு வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் இறந்த கனகராஜ் அண்ணன் தனபாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.சம்பவம் நடந்த நாளில் கோத்தகிரி, கெரடாமட்டம், கோடநாடு, கூடலூரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் ஊட்டி கோர்ட்டில் கடந்த 27-ந் தேதி வழக்கு விசாரணையின் போது அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. தொடர்ந்து கோடநாடு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு, இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.இன்று கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், நாளை (வெள்ளிக்கிழமை) தடயவியல் நிபுணர் ராஜ்மோகன், நாளை மறுநாள் (சனிக்கிழமை) மின்வாரிய உதவி பொறியாளர் ஆகியோரிடம் விசாரணை நடைபெற உள்ளது.