கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மேலக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் கோவிந்தன் (வயது 45). என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி. இவர் விருத்தாசலம் அருகே பூதாமூரில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு விட்டு நேற்று தனது மனைவியுடன் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, அந்த வழியாக நிலக்கரி சாம்பல் ஏற்றி வந்த லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
லாரிகளுக்கு தீ வைப்பு
இதுபற்றி அறிந்து ஆத்திரமடைந்த மேலக்குப்பம் கிராம மக்கள் அவ்வழியாக நிலக்கரி சாம்பல் ஏற்றிக்கொண்டு வந்த 4 லாரிகள் மற்றும் ஒரு மண் வெட்டும் எந்திரத்தை வழிமறித்து நிறுத்தி 5 வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். டிரைவர்கள் கீழே குதித்து தப்பி ஓடி விட்டனர். ஆத்திரம் அடங்காத கிராம மக்கள் அவ்வழியாக வந்த 18-க்கும் மேற்பட்ட லாரிகளையும் வழிமறித்து கண்மூடித்தனமாக உருட்டுக்கட்டையால் அடித்து நொறுக்கினர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.