திண்டுக்கல் மிஷ்கின் தெருவை சேர்ந்தவர் பிஷ்கிநாதன் (வயது 60). இவர் திண்டுக்கல்லில் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நிறுவனத்தில் கார்த்திக் (24) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிஷ்கிநாதன் தனது காரில் கார்த்திக்கை அழைத்து கொண்டு வந்து, நேற்று முன்தினம் காலை திருச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் மாலையில் நடைபெற்ற தனது நண்பர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து இரவில் கார்த்திக்குடன் காரில் திண்டுக்கல்லை நோக்கி புறப்பட்டார். காரை பிஷ்கிநாதன் ஓட்டினார்.
திருச்சி-திண்டுக்கல் சாலையில் ராம்ஜிநகரை அடுத்துள்ள சோழன்நகர் அருகே சென்றபோது பிஷ்கிநாதனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மணல் குவியல் மீது ஏறி கவிழ்ந்தது. இதில் பிஷ்கிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கார்த்திக் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராம்ஜிநகர் போலீசார், பிஷ்கிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.