கருத்தரங்கில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது:-
நீட் தேர்வு என்பது நவீன குலகல்வி. குலகல்வி திட்டத்தை எதிர்த்து முதன்முதலில் நாகை அவுரித்திடலில் இருந்து மாபெரும் பிரசார பேரணி தொடங்கியது. அதில் வெற்றியும் பெற்றது. அதனால் தான் நீட் தேர்வு ஏன்? எதற்காக என்ற தலைப்பில் கருத்தரங்கம் நாகையில் நடத்தப்படுகிறது. மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த வசதி இல்லை. எனவே தமிழக மாணவர்கள் மருத்துவக்கல்வி படிக்க கூடாது, தமிழக மருத்துவ கல்லூரிகளில் பிற மாநில மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்தது தான் நீட் தேர்வு. இந்த தேர்வினால் தமிழகத்தை சேர்ந்த 18 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நெருக்கடி காலத்தில் மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வியை, மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டது. நீட் தர்வு தொடர்பாக தமிழக அரசு அமைத்த குழு 175 பக்கம் கொண்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, முகமது ஷாநவாஸ், நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணைச் செயலாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.