புதுக்கோட்டை,
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு கடும் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் நாளை (வியாழக்கிழமை) காலை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். தச்சங்குறிச்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பெயர் பதிவு நடைபெற்று வருகிறது.
இதில் புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து மாடுபிடி வீரர்கள் வருகை தந்து தங்களது பெயர்களை ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர். அவர்களிடம் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்து அனுமதி வழங்கி வருகின்றனர். இதேபோல காளைகளையும் அதன் உரிமையாளர்கள் பதிவு செய்து டோக்கன் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டில் (2022) முதல் ஜல்லிக்கட்டு நாளை தச்சங்குறிச்சியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி ஜல்லிக்கட்டு நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.