சென்னை,
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, டெங்குவை பரப்பும் கொசுவை கட்டுப்படுத்த இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து மனுதாரர், சாலைகளில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், டெங்கு கொசுவை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் தூய்மைப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அந்த வாகனங்களை எல்லாம் மாநகராட்சி அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இதை மறுத்த மாநகராட்சி தரப்பு வக்கீல், வாகனங்களை அப்புறப்படுத்துவது போக்குவரத்து போலீசாரின் பணி என்று கூறினார். இதையடுத்து நீதிபதிகள், வாகனங்களை அப்புறப்படுத்த போலீசாரை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொள்ள வேண்டும். கொசுவை கட்டுப்படுத்த புகை போடுவது போன்ற பணிகளுக்கு உரிய கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறினர்.
பின்னர், டெங்கு பரவலை கட்டுப்படுத்த மருந்துகள் கொள்முதல் செய்வதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்பது குறித்து விளக்கமளிக்கும்படி, மத்திய சுகாதார துறைக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 5-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.