வேலூர்,
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஓட்டேரிபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (26 வயது), எலக்ட்ரீசியன். இவருக்கும் அணைக்கட்டு தாலுகாவை சேர்ந்த ஒரு தனியார் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 18 வயது மாணவிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இது, நாளடைவில் காதலாக மாறியது. மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சந்தோஷ் பழகியுள்ளார்.
இதனிடையே கடந்த 2024-ம் ஆண்டு சந்தோசுக்கு வேறு பெண்ணுடன் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதை, அவர் மறைத்து கல்லூரி மாணவியுடன் தொடர்ந்து பழகியதாகவும், அந்த சமயத்தில் இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தோசுக்கு திருமணமானது மாணவிக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவருடன் பேசுவதையும், பழகுவதையும் மாணவி நிறுத்திவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உடனடியாக பெற்றோர் வேலூர் பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி மகளிடம் விசாரித்தனர். அப்போது அவர், சந்தோஷ் திருமணமானதை மறைத்து காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து மாணவியின் தாயார் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.