கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கவர்னர் காரை போதையில் பின்தொடர்ந்த வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்

போலீஸ் பாதுகாப்பையும் மீறி பைக்கில் வந்த வாலிபர்கள் கவர்னரின் கார் அருகே சென்றனர்.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று இரவு திருவான்மியூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னும், பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. அப்போது, அடையாறு புற்றுநோய் மருத்துவனை அருகே கவர்னரின் கார் வந்தபோது, போலீஸ் பாதுகாப்பையும் மீறி பைக்கில் வந்த வாலிபர்கள் 2 பேர் காரின் அருகே சென்றனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார், பாதுகாப்பு வாகனத்தை நிறுத்தவும் முடியாமல், வாலிபர்களை பிடிக்கவும் முடியாமல் திண்டாடினர். இதனால், அடுத்து சிக்னலில் பாதுகாப்பு பணியில் நின்ற போக்குவரத்து போலீசாருக்கு வாக்கி-டாக்கி மூலம் தகவல் கொடுத்தனர். கவர்னர் மாளிகை முதலாவது கேட் அருகே கவர்னரின் கார் சென்றபோது, வாலிபர்கள் பைக்கின் வேகத்தை குறைத்துள்ளனர். அப்போது, அங்கிருந்த போலீசார் வாலிபர்களை மடக்கிப்பிடித்து, கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு போலீசார் விசாரணை நடத்தியபோது, இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தது தெரிய வந்தது. அதில் ஒருவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அன்புராஜ் (22 வயது), மற்றொருவர் விழுப்புரத்தை சேர்ந்த ஜீவா (22 வயது) என்பதும் தெரியவந்தது. இருவரும் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். நேற்று விடுமுறை நாள் என்பதால், அடையாறு பகுதியில் உள்ள நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் மது அருந்தியுள்ளனர். பின்னர், பெருங்களத்தூர் நோக்கி பைக்கில் சென்றபோதுதான், கவர்னரின் காரை துரத்தியுள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT