லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ராகுல் சீனிவஸ்தா. இவரது மனைவி தனு சிங். இந்த தம்பதி கடந்த 4 ஆண்டுகளுக்குமுன் காதல் திருமணம் செய்துகொண்டனர். தம்பதிக்கு குழந்தை இல்லை.
இதனிடையே, கடந்த புதன்கிழமை கணவன், மனைவி இருவரும் உறவினர் வீட்டில் நடைபெற்ற விழாவிற்கு சென்றுள்ளனர். விழாவில் பங்கேற்றுவிட்டு மாலை இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது தனு சிங்கின் தங்கை அஞ்சலியும் வீட்டிற்கு வந்துள்ளார். அனைவரும் வீட்டில் இருந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, தனு சிங்கை அவரது கணவர் குரங்கு என்று அழைத்து கிண்டல் செய்துள்ளார். இதனால், தனு சிங் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், அனைவருக்கும் இரவு உணவு வாங்க ராகுல் கடைக்கு சென்றுள்ளார். தனு சிங்கின் தங்கை அஞ்சலி வீட்டில் உள்ள மற்றொரு அறையில் இருந்துள்ளார். அப்போது, தனு சிங் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உணவு வாங்க சென்ற ராகுல் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் மனைவியை அழைத்துள்ளார். ஆனால், தனு சிங் அறையின் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராகுல் அறையின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளார். அங்கு தனு சிங் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராகுல் இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்த தனு சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.