நெல்லை,
நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே வரகனூரில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த வெடி விபத்தில் 7 பேர் பலியானார்கள். இதையடுத்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அந்த ஆலையின் வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டும் பணியில், பக்கத்து ஊரான மாங்குடியைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த ஆலை வளாகத்தில் தொழிலாளர்கள் சமையல் செய்தபோது வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் மாங்குடியைச் சேர்ந்த குருசாமி, கோபால், கனகராஜ், அர்ஜூன், காமராஜ் ஆகிய 5 பேரும் உடல் கருகி படுகாயம் அடைந்தனர். அவர்களை சிவகாசி, மதுரை, நெல்லை ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி, குருசாமி, கோபால், கனகராஜ், அர்ஜூன் ஆகியோர் உயிரிழந்தனர்.
வெடி விபத்தில் படுகாயம் அடைந்த காமராஜிக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் காமராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேருமே உயிரிழந்ததால், மாங்குடி கிராமமே சோகத்தில் மூழ்கியது.