Image Courtesy: AFP 
உலக செய்திகள்

கீவ் நகரை நெருங்கும் ரஷிய படைகள்..! வான்வழி தாக்குதலில் 35 பேர் பலியானதாக உக்ரைன் தகவல்

லிவிவ் நகரத்தில் உள்ள ராணுவ தளத்தில் ரஷிய படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 35-பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

லிவிவ்,

உக்ரைன் மீது வன்மம் கொண்டு ரஷியா தொடங்கி உள்ள போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. இன்று இந்த போர் 18-வது நாளை எட்டியது. இந்த போரினால் இதுவரை 25 லட்சம் மக்கள் அகதிகளாகி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி, சுலோவாக்கியா ஆகியவற்றில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே ரஷிய படைகள் வட கிழக்கில் இருந்து உக்ரைனின் தலைநகர் நோக்கி முன்னேறி வருகின்றன. டாங்கிகள் மற்றும் பீரங்கிகள் ஏற்கனவே முற்றுகையிட்ட இடங்களில் இருந்து தாக்குதல் தொடுத்து வருவதால் ஒரு நகரத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூட முடியவில்லை.

கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் ரஷிய படைகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன. அதே நேரத்தில் வடக்கு மற்றும் கீவ் நகரைச்சுற்றியுள்ள பகுதிகளில் போராடி வருகின்றனர். ரஷிய படைகள், கீவ் நகரை சுற்றிவளைக்க தீவிரம் காட்டுகின்றன.

உக்ரைனின் வடக்கு , மேற்கு, வடகிழக்கு ஆகிய இடங்களை சுற்றி ரஷிய படைகள் முன்னேறிவிட்டன. இதனால், விரைவில் கீவ் நகரத்தை முழுமையாக ரஷிய படைகள் சுற்றி வளைக்கும் என்று கூறப்படுகிறது. பல இடங்களில் வான் வழி தாக்குதல்களையும் ரஷிய படைகள் நடத்தி வருகின்றன. மேற்கு நகரமான லிவிவ் நகரத்தில் உள்ள ராணுவ தளத்தில் ரஷிய படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 35-பேர் கொல்லப்பட்டதாக லிவிவ் பிராந்திய கவர்னர் தெரிவித்ததாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷிய படைகள் நடத்திய ராணுவ தளம் லிவிவ் நகரில் இருந்து 25 மைல் தொலைவில் அமைந்திருக்கும் யாவிரோவ் என்ற இடத்தில் உள்ளது. இந்த தளத்தில் தான் , உக்ரைன் படை வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். வெளிநாட்டு ராணுவ பயிற்சியாளர்களும் இதில் பங்கேற்று வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர்.

அந்த வகையில், அமெரிக்கா, கனடா நாட்டு ராணுவ பயிற்சியாளர்களும் இதில் பங்கேற்று பயிற்சித்து அளித்து இருக்கின்றனர். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கியதும், வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இந்த ராணுவ தளத்தில் இருந்து வெளியேறிவிட்டது குறிப்ப்பிடத்தக்கது.