உலக செய்திகள்

ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிவால் பயங்கர வெடிப்பு; 2 பேர் பலி

ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிவால் பயங்கர வெடிப்பு; 2 பேர் பலி.

மாஸ்கோ,

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள நோஜின்ஸ்க் நகரில் 9 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இங்குள்ள 73 வீடுகளில் 200-க்கும் அதிகமானோர் வசித்து வந்தனர்.இந்தநிலையில் நேற்று காலை இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிவு காரணமாக பயங்கர வெடிப்பு நேரிட்டது. இந்த வெடிப்பு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மற்றும் 3-வது தளம் இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் பலர் சிக்கினர்.இந்த விபத்தை தொடர்ந்து அங்கு உடனடியாக மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விபத்தின்போது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 173 பேரை பத்திரமாக மீட்டனர். எனினும் இந்த கோர விபத்தில் ஒரு பெண் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிறுவர்கள் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.