உலக செய்திகள்

அல்ஜீரியாவில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 2 போலீசார் பலி

அல்ஜீரியாவில் ஐ.எஸ். அமைப்பு தீவிரவாதி நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 2 போலீசார் பலியாகியுள்ளனர்.

அல்ஜீரியா நாட்டின் தியாரெத் நகரில் அமைந்த காவல் தலைமையகத்திற்குள் தீவிரவாதி ஒருவன் அத்துமீறி நுழைய முயன்றுள்ளான். இதனை கண்ட பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக உஷாராகினர். அவர்களில் ஒரு காவலர் துணிச்சலுடன் பாய்ந்து சென்று தீவிரவாதியை தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆனால், வெடிகுண்டுகள் நிரப்பிய பெல்ட் அணிந்து, ஆயுதம் ஏந்தி வந்த அந்த தீவிரவாதி உடனடியாக வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளான். இதில், காவலர் பலியாகி உள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

கடந்த பிப்ரவரியில் கான்ஸ்டன்டைன் நகரில் காவல் நிலையத்தின் மீது நடத்த முயன்ற தற்கொலை தீவிரவாத தாக்குதலை காவலர் ஒருவர் முறியடித்து விட்டார். இந்நிலையில், அந்நாட்டில் இந்த வருடத்தில் 2வது முறையாக தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.