உலக செய்திகள்

உக்ரைனுக்கு உலக வங்கி ரூ.5,422 கோடி நிதி உதவி..!

உக்ரைனுக்கு ரூ.5,422 கோடி நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கியின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

வாஷிங்டன்,

ரஷியா தொடுத்துள்ள போரால், உக்ரைன் நாடு நிலை குலைந்து போய் உள்ளது. அந்த நாட்டின் பொருளாதாரம், போரினால் சீர் கெட்டுப்போயிருக்கிறது. இந்த தருணத்தில் உக்ரைனுக்கு உலக வங்கி தாராள மனதோடு நிதி உதவி செய்கிறது.

அந்த நாட்டுக்கு 723 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,422 கோடி) நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கியின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுபற்றி உலக வங்கி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

உக்ரைனுக்கான கூடுதல் பட்ஜெட் ஆதரவு தொகுப்புக்கு உலக வங்கியின் இயக்குனர்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது உக்ரைனில் பொருளாதார அவசர நிலையை மீட்பதற்கான நிதி.

கூடுதல் கடன் 350 மில்லியன் டாலர் ஆகும். 139 மில்லியன் டாலர் உத்தரவாதம் ஆகும். 134 மில்லியன் மானிய நிதி, 100 மில்லியன் டாலர் இணை நிதி உதவி ஆகும்.

இந்த நிதியானது ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கான ஊதியம், முதியோர் ஓய்வூதியம், பாதிக்கப்படக்கூடியவர்களுக்கான சமூகத்திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை வழங்க உக்ரைனிய அரசுக்கு உதவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது