ஜெனீவா,
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி மக்களின் உயிர்களை பறித்ததோடு மட்டுமல்லாமல், பொருளாதார பிரச்சினைகளும் ஏற்பட காரணமாக அமைந்தது. கொரோனாவுக்கு மருந்துகள் எதுவும் இல்லாததால், ஊரடங்கு என்ற அஸ்திரத்தை உலக நாடுகள் முதலில் கையாண்டன.
இதனால், லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர். தொழில் நிறுவனங்களும் கடும் நஷ்டத்தை சந்தித்தன. கொரோனா குறையத்தொடங்கியதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. தற்போது மீண்டும் 2 வது அலை பல நாடுகளில் பரவி வருகிறது.
இந்த நிலையில், உலக சுகாதார நிறுவன உச்சி மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்று பேசிய ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டொனியோ கட்டெரெஸ், கொரோனா நோய் தடுப்பு மருந்துகள், சோதனைகள் மற்றும் சிகிச்சைகள், உயிர்களை காக்கும் கருவிகள் மட்டுமல்ல, பொருளாதாரத்தையும் சமுகத்தையும் காப்பாற்றுபவை என தெரிவித்துள்ளார்.