

ருத்ரம் சினிமாஸ் சார்பில் அறிமுக இயக்குனர் ராஜ துரை சிங்கம் எழுதி, இயக்கியுள்ள புதிய படம், ‘சிங்கா’.'கயல்' சந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார். மலையாள நடிகைகள் சிஜா ரோஸ் மற்றும் மீனாட்சி ரவிந்திரன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இதில் ஆதித்யா கதிர், சூப்பர் குட் சுப்ரமணி, டி.எஸ்.ஆர். மற்றும் மலையாள நகைச்சுவை நடிகர் அரிஸ்டோ சுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி இசையமைக்கிறார்.
மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பையும், முறியாத பிணைப்பையும், கொண்டாடும் இதயத்தை வருடும் குடும்பக் கதையாக சிங்கா உருவாகி இருக்கிறது, புகழ்பெற்ற இயக்குநர்கள் வசந்த், சற்குணம் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றி அனுபவத்தைப் பெற்ற இயக்குநர் ராஜா துரை சிங்கம் இயக்கும் இந்த படம், உணர்ச்சி, நம்பிக்கை, காதல், ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலவையாக குடும்பம் முழுவதும் ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது.
கதையின் மையத்தில் இருக்கும் ‘சிங்கா’ எனும் அன்பான லாப்ரடார் நாய் தனது அழகிய அரவணைப்பினாலும், ஆழமான உணர்வுகளாலும் அனைவரின் மனங்களையும் நிச்சயம் கவருவான். மனிதனுடன் பகிரும் நட்பின் மூலம் அன்பு, நம்பிக்கை, வாழ்க்கைப் பயணம் ஆகியவை எவ்வாறு மலர்கின்றன என்பதைக் காட்டும் கதை இது.
‘சிங்கா’ படம் குறித்து கயல் சந்திரன் கூறியதாவது:- "சிங்கா படம் எனக்கு பல்வேறு அனுபவங்களையும், உணர்ச்சிகளையும் தந்த அழகான பயணம். இதுவெறும் நாயைப் பற்றிய கதை அல்ல. அன்பு, பிணைப்பு, தேடல், நம்பிக்கை போன்ற மனிதனின் மனநிலைகளையும், செல்லப்பிராணியின் தூய உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக நாயுடன் இணைந்து நடித்தது மிகவும் சவாலானது. நாய்களும், குழந்தைகளும் நீண்ட நேரம் கட்டுப்பாட்டில் இருக்கமாட்டார்கள். அதனால் பொறுமை எவ்வளவு அவசியம்? என்பதை ஆழமாக உணர்ந்தேன். அந்த கடினமான தருணங்களை இயக்குனர் பொறுமையுடன் கையாண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்தது. 'சிங்கா' என்னை கவர்ந்தது போல நிச்சயம் ரசிகர்களையும் கவர்வான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தனிப்பட்ட முறையில், 'சிங்கா படத்தினை திரையில் வரும் தருணத்தை என் சிறிய மகன் எப்படி எதிர்கொள்வான்? என்பதைக் காண்பதற்காக காத்திருக்கிறேன். அவன் விலங்குகள், பறவைகள் மீது அன்பு கொண்டாலும், நாய்களைப் பார்த்தால் கொஞ்சம் பயப்படுவான். இந்த படம் அவன் பார்வையை மாற்றும் என்று நம்புகிறேன். படப்பிடிப்பின் போது நாயின் அன்பை உணர்ந்தபோது என்னுள் தோன்றியது, மனிதர்கள் நாய்களைப் போல பரிசுத்தமான அன்பை கொடுத்து வாழ்ந்தால் இந்த உலகம் இன்னும் அழகாக இருக்கும் என்பதுதான். இந்த படம் அனைவரையும் ஈர்க்கும்", என்று கயல் சந்திரன் கூறினார்.
இந்நிலையில், ‘சிங்கா’ படத்திலிருந்து ‘காதுக்குள்ள குருவி’ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை மணி அமுதவன் எழுத அந்தோணி தாசன் பாடியுள்ளார்.