

திருப்பதி,
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாவது நாளான நேற்று காலையில் சுப்ரபாதத்தில் பகவானை துயிலெப்பி, பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தோமாலை சேவை சகஸ்ரநாமார்ச்சனை நடைபெற்றது.
பின்னர், கோதண்டராமர், சீதாதேவி மற்றும் லட்சுமணருக்கு ஸ்னாபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலை 6.30 மணியளவில் சீதா தேவி, ராமர் மற்றும் லட்சுமணர் தெப்ப உற்சவத்திற்காக ஸ்ரீராமச்சந்திர புஷ்கரணிக்கு புறப்பட்டனர். அங்கு சென்றடைந்ததும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, 7 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி நாகரத்னா, கோவில் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
* ஏப்ரல் 1: வசந்தோற்சவம் நிறைவு, தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம்
* ஏப்ரல் 13: பாஷ்யகார உற்சவம் ஆரம்பம்
* ஏப்ரல் 20: அட்சய திரிதியை, பரசுராம ஜெயந்தி, பிருகு மகரிஷி வருஷ திருநட்சத்திரம், ஸ்ரீனிவாச தீட்சிதர் வருஷ திருநட்சத்திர பூஜை.
* ஏப்ரல் 21: அனந்தாழ்வார் உற்சவம் ஆரம்பம், சங்கர ஜெயந்தி.