மாநிலங்களவை தி.மு.க. வேட்பாளர்கள் இன்று மனுத்தாக்கல்

மாநிலங்களவை தி.மு.க. வேட்பாளர்கள் இன்று (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.
Published on

சென்னை,

நாடாளுமன்ற மாநிலங் களவையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் திருச்சி சிவா (தி.மு.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.), மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அ.தி.மு.க.), முத்துக்கருப்பன் (அ.தி.மு.க.) ஆகிய 6 பேரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.

இந்த காலியிடங்களுக்கு புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக வருகிற 26-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. வேட்புமனுக்களை பெறுவதற்காக, தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி தி.மு.க. வேட்பாளர்கள் யார்? என்பதை அக்கட்சி தலைமை அறிவித்தது. திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகிய 3 பேரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் 3 பேரும் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.

சட்டசபை கூட்டமும் இன்று தொடங்க இருப்பதால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய நிர்வாகிகளுடன் சென்று அக்கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com