

புதுடெல்லி,
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதால், டெல்லி-என்.சி.ஆரில் சி.என்.ஜி. விலையை கிலோவுக்கு ரூ.3.89 உயர்த்தி இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐ.ஜி.எல்.) அறிவித்துள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி, டெல்லியில் ஒரு கிலோ சி.என்.ஜி. ரூ.86.98-க்கும், நொய்டா மற்றும் காஜியாபாத்தில் ரூ.95.59-க்கும், மீரட்டில் ரூ.95.47-க்கும், குருகிராமில் ரூ.92.01-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் சி.என்.ஜி. விலை உயர்த்தப்படுவது 5-வது முறையாகும்.
மே மாதத்துக்குப் பிறகு தற்போது முதல் முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. அப்போது 10 நாட்களில் 4 கட்டங்களாக விலை கிலோவுக்கு மொத்தம் ரூ.6 உயர்த்தப்பட்டது.
மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதால், ஹார்முஸ் நீரிணை வழியாக எரிவாயு சரக்குகள் செல்வதில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், உலகளவில் எல்.என்.ஜி. விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சி.என்.ஜி. விலையையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.என்.ஜி. விலை உயர்வால் டெல்லி-என்.சி.ஆரில் ஆட்டோ, டாக்சி மற்றும் சரக்கு வாகனங்களின் கட்டணங்களிலும் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.