

தூத்துக்குடி,
தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்கள் 2027-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பெற வருகிற 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசால் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், பொதுச்சேவை, விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த சாதனை புரிந்த தனி நபர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அந்த வகையில் விளையாட்டுத் துறையில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், மலையேற்றம், விளையாட்டுத் துறையை மேம்படுத்தியவர்கள் மற்றும் ஊக்கப்படுத்தியவர்கள், பன்னாட்டு அளவிலான போட்டிகளை சிறப்பாக நடத்தியவர்கள், பன்னாட்டு அளவில் யோகா போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் ஆகி சாதனையாளர்களுக்கு 2027-ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை படைத்த தகுதியான நபர்கள், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான awards.gov.in வாயிலாக விண்ணப்பங்களைப் பெற்று, வரும் 31.7.2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளாளர்.