தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதா; கவர்னர் ஒப்புதல்

சட்ட திருத்த மசோதா கடந்த ஜனவரி மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதா; கவர்னர் ஒப்புதல்
Published on

சென்னை,

தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்ட திருத்த மசோதா

தமிழக அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் வழியே நிரப்பப்படும் அனைத்து காலியிடங்களிலும் 20 சதவீதம் இடங்களை தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2010-ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், ஒரு பணிக்கு விண்ணப்பித்தவர் அரசு பணியில் இருக்கிறாரா, இல்லையா என்பதை ஆராயாமல் இதுநாள் வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு முன்னுரிமை வழங்கி வந்தது.

இந்த சூழ்நிலையில் சென்னை ஐகோர்ட்டு, ஏற்கனவே அரசுப் பணியில் உள்ளவர்கள் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்ற வகைப்பாட்டின் கீழ் முன்னுரிமைக்கு தகுதியற்றவர்கள் என தீர்ப்பளித்தது. இதை தெளிவுப்படுத்தவும் கடந்த 2010 செப்டம்பர் 7-ம் தேதிக்கு பின் இதுநாள் வரை தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பணியில் சேர்ந்தது செல்லும் என்பதை உறுதிப்படுத்தவும், புதிதாக சேருவோருக்கு மட்டும், அச்சலுகையை பயன்படுத்தவும், புதிய சட்ட திருத்த மசோதா கடந்த ஜனவரி மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

கவர்னர் ஒப்புதல்

இந்த நிலையில், தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 20% ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இனிமேல் புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்களுக்கு மட்டுமே இந்த திருத்தச் சட்டம் செல்லுபடியாகும் என்று திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்விரவம்:-

* 1-ம் வகுப்பு வகுப்பு முதல் அரசு வேலைக்கான வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள். இதர மொழிகளைப் பயிற்று மொழியாக கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.

* 1-ம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று, பின்னர் தமிழ் நாட்டில் தங்களது கல்வியினை, சேரும் வகுப்பிலிருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.

* பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com