

சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கவர்னர் அர்லேகர் பேசுகையில், “மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர்கள் தங்களுக்கு உதவி வேண்டுமெனில் கவர்னர் மாளிகையை அணுகலாம். நீங்கள் என்னிடம் அளிக்கும் கோரிக்கைகளை தமிழக அரசிடம் கொண்டு சென்று தீர்வுகான அறிவுறுத்துவேன். கவர்னரிடமும் அரசிடமும் எதிர்பார்ப்பு இருந்தால் கூறுங்கள். ஒன்றிணைந்து மக்களுக்காக செயல்படுவோம்.
வாக்களித்த மக்களால் பிரச்சினைகளை உணரமுடியும், தீர்வு சொல்லவும் முடியும். என்னிடம் தீர்வுகளை சொன்னால் நான் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சரிடம் சொல்வேன். நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாமல் போனது தான் மிகப்பெரிய பிரச்சினை” என்று தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் போட்டி அரசாங்கம் நடத்த கவர்னர் அர்லேகர் முயல்வதாக சி.பி.ஐ. விமர்சனம் செய்துள்ளது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வுகாண கவர்னர் மாளிகையை அணுகலாம், கோரிக்கைகளை கவர்னர் மாளிகையில் தெரிவிக்கலாம் என நூல் வெளியீட்டு விழாவில் கவர்னர் ராஜேந்திர அர்லேகர் பேசியதற்கு இந்திய கம்யூனிஸ்டு கண்டனம் தெரிவிக்கிறது.
இது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறிவிப்பாகும்; கவர்னரின் அத்துமீறலை தடுத்து நிறுத்த, ஜனாதிபதி தலையிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.