

சென்னை,
சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர்.
சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் ஆ.ராசா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆ. ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில், ஆ.ராசா இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-
தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்;
என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை.
நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.