

சென்னை,
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 13-ந் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது. ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் கிடைத்தன. 5 பேர் நடுநிலை வகித்தனர். தி.மு.க. வெளிநடப்பு செய்தது.
இதில், அ.தி.மு.க.வை சேர்ந்த 25 உறுப்பினர்களும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்திருந்தனர். இவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதம் மீதான நடவடிக்கை குறித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தலைமைச்செயலகத்தில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் 25 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, அவரிடம் இருந்து 4 கடிதங்கள் வரப்பெற்றன. அதன்பின்னர், 21 உறுப்பினர்கள் அளித்த விளக்கத்தை ஏற்று, அவர்களை மன்னித்து விடுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அவர் வழங்கிய 4 கடிதங்களை முறையாக ஆய்வு செய்தேன்.
எடப்பாடி பழனிசாமி 13-5-2026 அன்று அனுப்பிய கடிதத்தில் தெரிவித்தபடி, உறுப்பினர்களின் மன்னிப்பு கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடுகிறேன். எஞ்சிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தார். அதன்படி, உறுப்பினர்கள் எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா மீது நடவடிக்கை தொடங்கிவிட்டது. என்ன நடவடிக்கை என்பது பிறகு அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.