

புதுடெல்லி,
140 கோடி மக்கள்தொகையை கொண்ட இந்தியாவின் எல்.பி.ஜி. கியாஸ் தேவையில் 60 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. ஈரான் - இஸ்ரேல் போருக்கு முன்பு எல்.பி.ஜி. இறக்குமதியில் 90 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பெறப்பட்டது. தற்போது, அந்த கடல் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், இறக்குமதி அளவு 55 சதவீதமாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக, இந்தியாவின் சமையல் எரிவாயு இறக்குமதி மற்றும் விலை மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது. வீடுகளுக்கான கியாஸ் சிலிண்டர் வினியோகத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதுடன், பற்றாக்குறையை சமாளிக்க மாற்று வழிகளையும் ஆராய்ந்து வருகிறது.
கியாஸ் இறக்குமதிக்கு குறிப்பிட்ட நாடுகளுக்கு பதிலாக, பல்வேறு நாடுகளை சார்ந்திருப்பது, மாற்று கடல் வழித்தடங்களை பயன்படுத்துவது, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் தேவையை நிர்வகிப்பது போன்ற மாற்று வழிகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
என்றாலும் தற்போதுள்ள சூழ்நிலையில், இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் சீராக 3 முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும் என மத்திய அரசு அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.