நவீன தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்படும் அவை வளாகம்: தமிழக சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு

தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பும் வகையில் நவீன தொழில்நுட்ப முறையில் அவை வளாகம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
நவீன தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்படும் அவை வளாகம்: தமிழக சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு
Published on

சென்னை,

கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு தமிழக சட்டசபை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

தி.மு.க. ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் அவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புனித ஜார்ஜ் கோட்டையில் பேரவை நிகழ்வுகள் நடைபெறும்போது நேரலையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

தொழில்நுட்பம்

கொரோனா தொற்று குறைந்து வருவதால், வரும் ஜனவரி மாத கூட்டத் தொடரை தலைமைச் செயலகத்தில் உள்ள பாரம்பரிய சட்டசபையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நேரலை ஒளிபரப்புக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சட்டசபை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக அவர்கள் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, டெல்லி போன்ற சட்டசபை நேரடி ஒளிபரப்பை நடத்தும் மாநிலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதோடு, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை ஆகிய அவைகளில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யும் தொழில்நுட்ப மற்றும் நடைமுறைகளையும் ஆய்வு செய்தனர்.

நேரலை ஒளிபரப்பு வசதி

அதன் அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபையில் நேரலை ஒளிபரப்பை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சட்டசபை வளாகம் அதற்கேற்ற வகையில் தயார் செய்யப்படுகிறது. அதோடு சட்டசபையை புதுப்பிக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களின் மேஜையிலும் தொடுதிரை கணிப்பொறி (டச் ஸ்கிரீன்), வைக்கப்பட உள்ளன. சட்டசபையில் அன்று தாக்கல் செய்யப்பட்டும் ஆவணங்களை எம்.எல்.ஏ.க்கள், அந்த டச் ஸ்கிரீனை தொட்டு, திரையில் அவற்றை படித்துக் கொள்ளலாம்.

தொற்றைப் பொறுத்து....

இதே ஏற்பாடு கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டசபையிலும் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என்று சட்டசபை அதிகாரி ஒருவர் கூறினார். கொரோனா தொற்று தொடர்ந்து குறைத்து இருந்தால், வரும் ஜனவரி மாதம் நடைபெறும் கவர்னர் உரை கூட்டத் தொடர், பாரம்பரிய சட்டசபையில் நடத்தப்படும். அங்கு கூட்டத்தொடர் நடக்கும் பட்சத்தில், நேரலை ஒளிபரப்பும் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒருவேளை கொரோனா தொற்றின் நிலை கூடிவிட்டால், கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடர் நடத்தப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com