

சென்னை,
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 90 திட்டங்களின் மதிப்பீட்டை மறு ஆய்வு செய்ய த.வெ.க. அரசு உத்தரவிட்டுள்ளதால், மேயர் பிரியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் 90 புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை மேயர் பிரியா வெளியிட்டார்.
பட்ஜெட்டில் மொத்த வரவு ரூ.7,717 கோடியாகவும், செலவு ரூ.9,319 கோடியாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், நிதி பற்றாக்குறை ரூ.1,602 கோடியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.
இதுபோக, ஏற்கனவே உலக வங்கி, ஜப்பான் வளர்ச்சி வங்கி உள்ளிட்டவைகளில் வாங்கிய ரூ.2 ஆயிரம் கோடி கடனுக்கு ஆண்டுக்கு ரூ.95 கோடியே 20 லட்சம் வட்டி செலுத்தப்பட்டு வருவதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
மேயர் பிரியா அறிவித்த முக்கிய திட்டங்களான மாநகராட்சி பள்ளிகளுக்கு 50 கி.மீ. பாதுகாப்பான வழித்தடங்கள் அமைக்க ரூ.200 கோடி, 30 நீர்நிலைகளை சீரமைக்க ரூ.100 கோடி, 60 பூங்காக்களை அறிவியல்பூர்வமாக பொலிவூட்ட ரூ.60 கோடி, நீர்வழி கால்வாய்களில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்க ரூ.55 கோடி என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அதில் ஒன்று, 100 பள்ளிகளுக்கு 60 லட்சம் மதிப்பில் பிரிண்டர் வாங்கப்படும் என்பது. ஆனால், புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க. அரசு 100 பள்ளிகளுக்கும் ரூ.22 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலேயே பிரிண்டர்களை வாங்கி கொடுத்துள்ளது. இதனால், ரூ.37 லட்சத்து 78 ஆயிரம் அரசுக்கு மிச்சமாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கான நிதி குறித்து ஆராயப்பட்டது. அதில் பல திட்டங்களின் மதிப்பீடு கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின்போது மேயர் பிரியா அறிவித்த 90 திட்டங்களின் மதிப்பை மறு ஆய்வு செய்ய த.வெ.க. அரசு உத்தரவிட்டுள்ளது. இது மேயர் பிரியாவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.