

ரோம்,
670 சுற்றுலா பயணிகளுடன் உலகை சுற்றிவர சொகுசு கப்பல் ஒன்று இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து புறப்பட்டுள்ளது.
பறவைகள் பலவிதம் என்பதுபோல், பயணங்களிலும் பலவகைகள் உள்ளன. அந்த வகையில், நில வழித்தடங்களில் உள்ள போக்குவரத்து வசதிகளை அனைவரும் அனுபவித்து இருப்பார்கள். ஆனால், நீர்வழித்தடங்களில் உள்ள போக்குவரத்து வசதிகளை அனுபவித்தவர்கள் மிகவும் குறைவு.
எல்லோரும் கடற்கரையில் இருந்து ஆழ்கடலில் செல்லும் கப்பல்களை கண்டு ரசித்து இருப்போம். ஆனால், அந்த கப்பலில் இருந்து கடற்கரையில் உள்ள நகரை கண்டுரசிப்பது எவ்வளவு அழகு தெரியுமா?. அதுவும் இரவு நேரத்தில் அந்த நகரம் மின்னொளியில் ஜொலிப்பதை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இதுபோன்ற சாகச சுற்றுலா விரும்பிகளை குறிவைத்து, எக்ஸ்ப்ளோரேஷன்ஸ் பை நார்வேஜியன் என்ற நிறுவனம் நீண்டகால சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல முன்வந்தது.
371 நாட்கள் (ஓராண்டைவிட கூடுதல் நாள்) பயணத் திட்டத்தை வகுத்து விளம்பரப்படுத்தியது. இந்த ஓராண்டு கடல் பயணத்தில் 6 கண்டங்கள், 62 நாடுகளைச் சேர்ந்த 220-க்கும் மேற்பட்ட துறைமுகங்களுக்கு கப்பல் மூலம் சென்று, பின்னர் அங்கிருந்து முக்கிய இடங்களுக்கு வாகனங்களில் சென்று திரும்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, கடந்த (செப்டம்பர்) 1-ந் தேதி இத்தாலியின் தலைநகர் ரோம் நகரத்தில் இருந்து ரெகாட்டா என்ற பயணிகள் சொகுசு கப்பல் சுமார் 670 சுற்றுலா பயணிகளுடன் உலகை சுற்றிவர புறப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட சொகுசு கப்பலில் 348 ஆடம்பர அறைகள் உள்ளன.
இந்தக் கப்பலில் உள்ள தங்கும் அறைகள், சொகுசு வசதிகளைப் பொறுத்து அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில், உணவு, பொழுதுபோக்கு, உலகத்தரம் வாய்ந்த தங்குமிடம் மற்றும் பல்வேறு நாடுகளைச் சுற்றிப் பார்க்கும் வசதிகள் அனைத்தும் அடங்கும்.
ஆனால், தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில், இதுபோன்று உலகை மெதுவாக சுற்றிவரும் கடல் பயணத்தை அனைவரும் விரும்புவார்களா என்பது கேள்விக்குறிதான்.