உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள்: மும்பை அணியிலிருந்து விலகும் பிரித்வி ஷா

விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா கழற்றி விடப்பட்டார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட வீரர் பிரித்வி ஷா. 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை வழிநடத்தி ஐ.சி.சி உலகக்கோப்பையை கோப்பை வென்று கொடுத்த பெருமைக்குரியவர். அதன் காரணமாக வெகு விரைவிலேயே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.

முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் அசர வைத்தார். இதன் காரணமாக பெரிய வீரராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்து காணாமல் போனார். மேலும் ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணியிலிருந்தும் உடல் தகுதி மற்றும் ஒழுங்கீனம் காரணமாக கழற்றிவிடப்பட்டார்.

இருப்பினும் அதற்கு அடுத்து நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான மும்பை அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்த தொடரில் அவரது செயல்பாடுகள் சிறப்பானதாக இல்லை. இதனால் எதிர்வரும் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான மும்பை அணியில் இருந்து அவர் கழற்றி விடப்பட்டார்.

இந்நிலையில் மும்பை அணியிலிருந்து பிரித்வி ஷா விலக முடிவெடுத்துள்ளார். 3-4 மாநில அணிகளில் இருந்து தனக்கு வாய்ப்புகள் வந்துள்ளதாகவும், தற்போது தனது விருப்பங்களைப் பரிசீலித்து வருவதாகவும் சங்கத்திடம் தெரிவித்துள்ளார். எனவே மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து 'தடையில்லா சான்றிதழ்' கோரி கடிதம் எழுதியுள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com