

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலர் என 440 பதவிகளுக்கு மொத்தம் 2,580 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) வேட்புமனு பரிசீலனை நடக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மாநகராட்சியில் 60 வார்டுகள், 6 நகராட்சிகளில் 147 வார்டுகள், பேரூராட்சிகளில் 233 வார்டுகள் என மொத்தம் 440 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
22 தேர்தல் நடத்தும் அதிகாரிகள், 65-க்கும் மேற்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேர்தல் பணியாற்றுகிறார்கள். கடந்த மாதம் 28-ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் வேட்பு மனு பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் வரை 1,257 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
2,580 பேர் மனு
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று மனுதாக்கல் செய்ய ஏராளமானவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் முன்பு குவிந்தனர். இதனால் அதிகளவில் கட்சியினர், பொதுமக்கள், ஆதரவாளர்கள் காணப்பட்டனர். மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 388 பேரும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 450 பேரும், பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 485 பேரும் என மொத்தம் 1,323 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நேற்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றது. முக்கிய கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்வமுடன் வந்தனர். இதனால் வேட்புமனுத் தாக்கல் செய்யும் மையங்களில் கூட்டம் களை கட்டியது. அனைத்து பகுதிகளிலும் குறிப்பிட்டவர்களை மட்டுமே மனுதாக்கலுக்கு போலீசார் அனுமதித்தனர். மற்றவர்களை வெளியே தடுத்து நிறுத்தினர்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,580 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட உள்ளாட்சி அலுவலகங்களில் இன்று (சனிக்கிழமை) காலை வேட்புமனு பரிசீலனை நடக்கிறது.