பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கணம்பள்ளி தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருடைய மகன் அசோக்குமார் (வயது30). இவர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வருகிறார். இவர் பாலக்கோட்டை சேர்ந்த கூலித் தொழிலாளிகளின் மகன்களான சிரஞ்சீவி, சிவசங்கர், கார்த்திகேயன் ஆகிய 3 பேரிடமும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளார்.
இதனால் அவர்கள் 3 பேரும் தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.9 லட்சம் அசோக்குமாரிடம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்டு அவர் வேலை வாங்கி தராமல் இருந்து வந்துள்ளார். இதனால் சிரஞ்சீவி உள்ளிட்ட 3 பேரும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணத்தை கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 3 பேரும் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதரிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலக்கோடு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது அசோக்குமார் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடமும் மொத்தம் ரூ.9 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அசோக்குமாரை இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் கைது செய்தார். மேலும் இவர் வேறு யாரிடமாவது பணம் மோசடி செய்துள்ளாரா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.