பெரம்பூர்,
திருவள்ளூர் கபிலன் தெருவைச் சேர்ந்தவர் ஹரி என்ற ஹரிகரன் (வயது 22). இவர் மீது செம்பியம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, 2 கொலை முயற்சி, வழிப்பறி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அவர் தொடர்ந்து செம்பியம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதுடன், வியாபாரிகளை மிரட்டி மாமூல் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். அவரை செம்பியம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தீவிரமாக தேடி வந்தார்.
இதற்கிடையில் ஹரிஹரன், முடிந்தால் என்னை பிடியுங்கள் பார்க்கலாம் என செம்பியம் போலீசாருக்கு சவால் விடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.
இந்தநிலையில் செம்பியம் ரமணா நகர் பகுதியில் பதுங்கி இருந்த ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.